வடக்கில் விவசாயத்திற்கு இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலநோம்பு திட்டங்கள் பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு இராணுவத்தினரால் பிரதானமாக பாதுகாப்பு நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கினை பொறுத்த வரை வடக்கு ஒரு விவசாய பூமி. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக அறிவித்திருக்கின்றது. அதேபோலவே இராணுவத்தினர் ஆகிய நாங்களும் விவசாயிகளுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம். எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சகல விதமான உதவி திட்டங்களையும் நாங்கள் வழங்கத் தயாராகவுள்ளோம்.
வட்டுக்கோட்டையில் விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு குளத்தினை புனரமைப்பு செய்வதற்கான வேலைத் திட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளோம். இதுபோல வடக்கில் எதிர்வரும் காலங்களில் விவசாய பெருமக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் முன்னெடுப்பவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.