குற்றக்கும்பல் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சமூக ஊடகங்களின் ஊடாக பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவது குறித்த எச்சரிக்கையை பொலிசார் விடுத்துள்ளனர்.
இது குறித்து இணைய குற்றப் பிரிவு பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, பலரிடமிருந்து இந்த குழு பண மோசடியில் ஈடுபட்டுள்ளது.
பாங்கொக்கிலுள்ள இலங்கை தூதரகத்திலும் இது குறித்த முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, சி.ஐ.டியிடம் தூதரகம் முறையிட்டுள்ளது.
அத்துடன், வேறு பலவிதங்களிலும் மோசடிகள் நடந்தது குறித்து பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றியாளர் என்றும், அவருக்கு பரிசாக கிடைத்துள்ள வாகனத்தை பெற்றுக்கொள்வதெனில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிலக்கத்திற்கு பண வைப்பு செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, போலி திருமண பேச்சுக்களின் மூலமும் பேஸ்புக் வழியாக நிதி மோசடி நடப்பதாக பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஏமாற்றுக்காரர்களிடம் சிக்காமலிருக்குமாறு பொதுமக்களை பொலிசார் கோரியுள்ளனர்.